அருணாசலேஸ்வரர் கோவில்: ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி

அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவையொட்டி, ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 3-ந் தேதி வரை (29-ந் தேதி தவிர) ஒருநாளைக்கு சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்திட கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் www.arunachaleswarrtemple.tnhrce.in என்ற கோவில் இணையதளத்தில் ஒரு நபருக்கு ஒரு நுழைவு சீட்டு என்ற முறையில் கட்டணமில்லாமல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதில் கேட்கும் விவரங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் நுழைவு சீட்டு பதிவு செய்பவர்களுக்கு கோவில் நிர்வாகம் நிபந்தனைகள் விதித்து உள்ளது.
அதாவது 59 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோய் தொற்று உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். கோவிலுக்குள் நுழையும்போது ஆதார் அட்டை நகல் அவசியம் கொண்டு வர வேண்டும். சிலைகளை தொட அனுமதியில்லை. மேலும் பக்தர்கள் வரிசையில் நிற்கும்போது சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அருணாசலேஸ்வரர் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story