சர்வதேச போட்டிகளில் விக்கெட் கணக்கைத் தொடங்கிய தமிழக வீரர் நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


சர்வதேச போட்டிகளில் விக்கெட் கணக்கைத் தொடங்கிய தமிழக வீரர் நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 2 Dec 2020 5:53 PM GMT (Updated: 2 Dec 2020 5:53 PM GMT)

சர்வதேச போட்டிகளில் விக்கெட் கணக்கைத் தொடங்கிய தமிழக வீரர் நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது. 

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் சுரேந்திரன் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்கார‌ராக களமிறங்கிய மார்னஸ் லபுஸ்சேன் நடராஜன் பந்துவீச்சில் பவுல்ட் ஆனார். இது நடராஜனின் முதல் சர்வதேச விக்கெட் ஆகும். அதனை தொடர்ந்து 48-வது ஓவரில் ஆஸ்டன் அகர் விக்கெட்டை வீழ்த்தினார். இன்றைய ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜனுக்கு தமிழகத்தில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது ஒருநாள் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் எடுத்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர் நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேசப் போட்டிகளுக்கான விக்கெட் கணக்கைத் தொடங்கியிருக்கும் தமிழக வீரர் நடராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள் என்றும் வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Next Story