ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை - தமிழருவி மணியன் + "||" + It has nothing to do with Rajini's spiritual politics and religious politics - Tamilaruvi Maniyan
ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை - தமிழருவி மணியன்
நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை நேற்று முன்தினம் வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்க இருப்பதாகவும், டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனுக்கு ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் பதவியும், அர்ஜூன மூர்த்திக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் ரஜினிகாந்த் அளித்துள்ளார். இந்நிலையில் இன்று சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து ஆலோசானை முடிந்த பின்னர் தமிழருவி மணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“டிசம்பர் 31-ம் தேதி ரஜினிகாந்த் புதிய கட்சி குறித்து அறிவிப்பார். இன்றைய ஆலோசனையின் போது அடிப்படை செயல்திட்டங்கள் குறித்து விவாதித்தோம். முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையில் எதுவும் பேசவில்லை. கூட்டணி குறித்து கட்சி தொடங்கிய பிறகுதான் முடிவெடுக்கப்படும்.
ரஜினி கட்சியால் தமிழகத்தில் பேரெழுச்சி உருவாகும். ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மற்ற அரசியல் கட்சிகளை விமர்சித்து ரஜினிகாந்த் அரசியல் செய்யமாட்டார். ரஜினி கட்சியுடன் காந்திய மக்கள் இயக்கம் இணையும்.”