புரசைவாக்கத்தில் இளம் பெண் படுகொலை - கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்


புரசைவாக்கத்தில் இளம் பெண் படுகொலை - கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 30 Nov 2021 9:10 PM GMT (Updated: 1 Dec 2021 6:00 AM GMT)

புரசைவாக்கத்தில் இளம் பெண் படுகொலை செய்யப்பட்டது அம்பலமானது. அவர் மழைநீரில் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை புரசைவாக்கம் வெள்ளாள தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 33). இவரது மனைவி ஹேமாவதி (24). இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. வினோத்குமார், சென்னை கொளத்தூரில் உள்ள விளம்பர நிறுவனம் ஒன்றில் புகைப்பட கலைஞராக வேலை செய்தார்.

வினோத்குமார்-ஹேமாவதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். விவாகரத்து கேட்டு, ஹேமாவதி வழக்கு போட்டதாக தெரிகிறது. பின்னர் இருதரப்பு உறவினர்களும் கலந்து பேசி இருவரையும் சேர்த்து வைத்தனர். விவாகரத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

படுகொலை

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மழைநீரில் வழுக்கி விழுந்து காயம் அடைந்து விட்டதாக, ஹேமாவதியை, வினோத்குமார் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றார். ஆனால் டாக்டர்கள் ஹேமாவதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஹேமாவதியின் தந்தை, தனது மகளை, வினோத்குமார் கொலை செய்து விட்டதாக கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆர்.டி.ஓ. விசாரணை நடந்தது. ஹேமாவதி உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. உதவி கமிஷனர் ரமேஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வனிதா கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டார்.

வினோத்குமார் கைது

வினோத்குமார்தான் கழுத்தை நெரித்து ஹேமாவதியை கொன்றுவிட்டு, மழைநீரில் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்தது. அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டு ஆர்.டி.ஓ. விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தன்னை உறவுப்பெண் உள்பட பல பெண்களுடன் தொடர்புபடுத்தி, ஹேமாவதி அவமானப்படுத்தி பேசியதால், கோபத்தில் கழுத்தை நெரித்து தாக்கியதில், அவர் இறந்து விட்டதாக, வினோத்குமார் தனது வாக்குமூலத்தில் கூறியதாகவும் போலீசார் கூறினார்கள்.

வினோத்குமார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். தாய் கொலை செய்யப்பட்டு, தந்தை சிறைக்கு போவதால், அவர்களது குழந்தை நிர்க்கதியாக நின்றது பார்த்தோர் நெஞ்சை கலங்க வைத்தது.

Next Story