முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வருகை


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வருகை
x
தினத்தந்தி 2 Dec 2021 12:20 AM GMT (Updated: 2 Dec 2021 12:20 AM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வருகிறார். அவர் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தூத்துக்குடிக்கு வருகிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 12.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்படுகிறார். மதியம் 1.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தை வந்தடைகிறார். தொடர்ந்து தூத்துக்குடி பிரையண்ட்நகர், அம்பேத்கர்நகர், ரகுமத் நகர் உள்ளிட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

மேலும் தூத்துக்குடி- எட்டயபுரம் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறார். பின்னர் கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். மேலும் தூத்துக்குடிக்கு வரும் முதல்-அமைச்சருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

Next Story