தமிழகத்தில் இன்று 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை தகவல்


தமிழகத்தில் இன்று 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 4 Dec 2021 3:19 PM GMT (Updated: 4 Dec 2021 3:23 PM GMT)

தமிழகத்தில் தற்போது வரை ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வரை 12 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. இந்தநிலையில் 13-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெற்றது.  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.  

தமிழகத்தில் இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 20 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது;-  

தமிழகம் முழுவதும்  தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற முகாமில் இது வரையில் சுமார் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 1.70 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்த மட்டில் தற்போது வரையில் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை” என்றார். 


Next Story