மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கழிவறை தொட்டியில் மூழ்கடித்து குழந்தையை கொன்ற பெண் கைது


மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கழிவறை தொட்டியில் மூழ்கடித்து குழந்தையை கொன்ற பெண் கைது
x
தினத்தந்தி 6 Dec 2021 8:00 PM GMT (Updated: 6 Dec 2021 8:00 PM GMT)

மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கழிவறை தொட்டியில் குழந்தை பிணமாக கிடந்த சம்பவத்தில் இளம்பெண் கைது செய்யப்பட்டார். திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் அடைந்ததால் அவமானத்தில் அந்த குழந்தையை கழிவறை தொட்டியில் மூழ்கடித்து கொன்றது தெரிய வந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறை தொட்டிக்குள் 4-ந் தேதி பிறந்த பச்சிளம் குழந்தையின் பிணம் மீட்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தை இறந்து கிடந்த கழிவறைக்கு கர்ப்பிணி பெண் ஒருவர் சென்று வந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

கர்ப்பிணியாக இருந்த இளம்பெண்

இதில் கடந்த 2-ந் தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த தஞ்சை மாவட்டம் ஆலக்குடியை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததும், 4-ந் தேதியன்று அந்த பெண் அங்கிருந்து சொல்லிக்கொள்ளாமல் ஆஸ்பத்திரியில் இருந்து சென்று விட்டதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் பன்னீர்செல்வம் என்பவரின் மகள் பிரியதர்ஷினி என்பது தெரியவந்தது. திருமணம் ஆகாத அந்த பெண் திருப்பூரில் உள்ள ஒரு நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அவருடன் பணிபுரிந்த சிதம்பரத்தை சேர்ந்த வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.

அதன் காரணமாக அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த வாலிபரிடம் பிரியதர்ஷினி கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அவமானமாக கருதினார்

இதனைத்தொடர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரியதர்ஷினி சொந்த ஊருக்கு வந்துள்ளார். தான் கர்ப்பிணியாக இருக்கும் விவரத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து உள்ளார். பின்னர் தனக்கு பிரசவ தேதி நெருங்குவதை அறிந்த அவர் வயிற்றுவலி என்று கூறி தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்ந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு கடந்த 3-ந் தேதி நள்ளிரவு பெண் குழந்தை பிறந்துள்ளது. கல்யாணம் ஆகாத தனக்கு குழந்தை பிறந்தது ஊருக்குள் தெரிந்தால் அவமானம் என்று கருதிய அந்த பெண் குழந்தையை ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு ஒன்றும் நடக்காததுபோல சென்றுவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பிரியதர்ஷினியை கைது செய்தனர்.

Next Story