2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று பெண் தற்கொலை


2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று பெண் தற்கொலை
x
தினத்தந்தி 7 Dec 2021 7:13 PM GMT (Updated: 7 Dec 2021 7:13 PM GMT)

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்,

கரூர் மாவட்டம் பூசாரிபட்டியை சேர்ந்தவர் சக்தி (வயது 35). இவர், கரூரில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சரண்யா (30). இவர்களது மகள்கள் கனிஷ்கா (6), பூவிஷா (3). இவர்களுடன் சக்தியின் தந்தை கருப்பசாமி, தாய் நாச்சம்மாளும் வசித்து வருகின்றனர்.

சரண்யா மனநலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

குழந்தைகளை கிணற்றில் வீசினார்

நேற்று முன்தினம் இரவு சரண்யா தனது குழந்தைகளுடன் ஒரு அறையிலும், கருப்பசாமி, நாச்சம்மாள் மற்றொரு அறையிலும் தூங்கினர். இந்தநிலையில் அதிகாலை 2 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த சரண்யா திடீரென கண் விழித்து, ஒரு மகளை தூக்கிக்கொண்டு வௌியே வந்தார்.

வீடு அருகே உள்ள 100 அடி ஆழ தரைக்கிணற்றில் மகளை வீசி விட்டு, வீட்டுக்கு வந்தார். பின்னர் மற்றொரு மகளையும் தூக்கிச்சென்று கிணற்றில் போட்டு விட்டு, தானும் குதித்தார்.

உடல்கள் மீட்பு

கிணற்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டு சக்தி, அவரது பெற்றோர், அருகில் வசிக்கும் உறவினர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது தாயும், 2 மகள்களும் கிணற்றில் இறந்து கிடந்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் கிணற்றில் இருந்து 3 பேரின் உடல்களையும் மீட்டனர்.

Next Story