வீட்டின் ஜன்னல் ஓரம் தூங்கும் பெண்களை குறிவைத்து: வேளச்சேரி பகுதியில் சங்கிலி பறித்த ஆந்திர கொள்ளையன் கைது


வீட்டின் ஜன்னல் ஓரம் தூங்கும் பெண்களை குறிவைத்து: வேளச்சேரி பகுதியில் சங்கிலி பறித்த ஆந்திர கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 7 Dec 2021 10:27 PM GMT (Updated: 8 Dec 2021 11:48 AM GMT)

வேளச்சேரி பகுதியில் வீட்டின் ஜன்னல் ஓரம் தூங்கும் பெண்களை குறி வைத்து தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த ஆந்திர கொள்ளையன் பிடிபட்டார்.

ஆலந்தூர்,

வேளச்சேரி பகுதிகளில் உள்ள வீடுகளில் ஜன்னலோரம் காற்றுக்காக படுத்திருந்த பெண்களின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக வேளச்சேரி போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில், அடிக்கடி வீட்டின் ஜன்னல் ஓரம் படுத்திருக்கும் பெண்களிடம் சங்கிலி பறித்து தப்பிச்சென்ற கொள்ளையன் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படையினர் ஆந்திரா சென்றனர். அங்கு பதுங்கி இருந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆந்திரா மாநிலம் நகரி பகுதியை சேர்ந்த திருலோகசந்தர் (வயது 56) என்பவரை பிடித்து கைது செய்து விசாரித்தனர்.

நகைகள் பறிமுதல்

அவரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பகலில் வந்து நள்ளிரவில் ஜன்னல் ஓரம் தூங்குவோரை நோட்டமிட்டு கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு ஆந்திராவில் உள்ள அடகு கடையில் விற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

இவர் மீது ஆதம்பாக்கம், பள்ளிகரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி ஆகிய காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து திருட்டு நகைகளை வாங்கியதாக நகரியில் உள்ள அடகு கடை உரிமையாளர் உகமாராம் (40) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவரிடம் 15 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story