ஒமைக்ரான் பாதிப்புள்ள மாநிலங்களில் இருந்து வருவோர் தீவிர கண்காணிப்பு


ஒமைக்ரான் பாதிப்புள்ள மாநிலங்களில் இருந்து வருவோர் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 11 Dec 2021 12:05 AM GMT (Updated: 11 Dec 2021 12:05 AM GMT)

ஒமைக்ரான் பாதிப்புள்ள மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

சென்னை,

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து மத்திய சுகாதாரத்துறையுடன் தமிழக அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. ஏற்கனவே, மத்திய அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்களின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்களுடனான காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலாளரும் அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களை நடத்தி தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

தீவிர கண்காணிப்பு

இந்த நிலையில், மாநில செயல் திட்டக்குழுவானது நோய்த் தடுப்பு முறைகள் குறித்து புதிய வழிகாட்டுதல்களை தற்போது வழங்கியுள்ளது.

அதன்படி, ஒமைக்ரான் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து தமிழக துறைமுகங்களுக்கு வரும் பயணிகளை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர்களில் யாருக்காவது தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களைத் தனிமைப்படுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.

தமிழக எல்லைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, ஒமைக்ரான் பாதிப்பு உள்ள மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோரை மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். மேலும், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முககவசம், சமூக இடைவெளி போன்ற நோய்த் தடுப்பு விதிகளை பொதுமக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா பாதிப்பு அதிகரித்தால் நிலைமையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து 3-வது அலை அச்சுறுத்தல் எழுந்தபோதே அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. தற்போது அதுபோன்ற சூழல் எழும்பட்சத்தில் அதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story