சிறுவர் பூங்காவுடன் கூடிய கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்


சிறுவர் பூங்காவுடன் கூடிய கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
x
தினத்தந்தி 17 Dec 2021 5:26 AM IST (Updated: 17 Dec 2021 5:26 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.14.50 கோடியில் சிறுவர் பூங்காவுடன் கூடிய கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

சென்னை,

சென்னை, கிண்டியில் உள்ள கத்திப்பாரா சந்திப்பு சென்னை மாநகரின் குறிப்பிடத்தக்க பெரிய அடையாளங்களின் ஒன்றாகவும், சென்னை மாநகரின் நுழைவு வாயிலாகவும் திகழ்கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய குளோவர் இலை வடிவமைப்பு என்ற நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மேம்பாலம் என்ற சிறப்பை கத்திப்பாரா மேம்பாலம் பெற்றுள்ளது. இம்மேம்பாலத்தை முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி கடந்த 2008-ம் ஆண்டு திறந்து வைத்தார்.

இந்தநிலையில், பூங்கா மற்றும் சிறுவர் விளையாடும் இடம் ஆகிய வசதிகளுடன் கூடிய நகர்ப்புற சதுக்கமாக (பூங்கா) இதனை மாற்ற திட்டமிடப்பட்டது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் நிதி உதவியுடன், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பில் பன்முகப் போக்குவரத்துகளை ஒருங்கிணைத்து, பயணிகள் ஒரு போக்குவரத்திலிருந்து மற்றொரு போக்குவரத்திற்கு மாறிச் செல்வதற்கும், பொதுமக்கள் மற்றும் பயணிகள் இளைப்பாறி செல்லும் வகையிலும், கத்திப்பாரா மேம்பாலத்திற்கு கீழ் உள்ள இடங்களில் ரூ.14 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்கான பெயர் பலகையை நேற்று திறந்து வைத்தார். பின்னர் பேட்டரி கார் மூலம் பூங்கா முழுவதும் சுற்றி பார்வையிட்டார். உடன் அமைச்சர் கே.என்நேரு, தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கம், அனைத்து பெரிய சாலைகளுடனும், வடக்கில் ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ நிலையம், தெற்கில் ஆலந்தூர் மெட்ரோ நிலையம் மற்றும் கிழக்கில் கிண்டி மெட்ரோ நிலையம் ஆகிய மெட்ரோ நிலையங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் நகரப் போக்குவரத்துடன் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டு, மாநகரப் போக்குவரத்துக் கழகப் பஸ்கள், நகர்ப்புறச் சதுக்கத்தில் தற்போது யு-திருப்பம் மேற்கொள்ள முடியும்.

சிங்காரச் சென்னை

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் ஒரு மைல் கல்லாக கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த நேரமும் சுறுசுறுப்புடன் இயங்கும் சந்திப்பின் இடையே இளைபாறும் பகுதியாக அமைந்துள்ளதுடன் நகரத்தின் இதுமாதிரியான இடங்களில் இதுவே முதலாவதாகும்.

நகர்ப்புறச் சதுக்கத்தின் வடிவமைப்பு நவீன சென்னையின் அடையாளத்தையும், கலாசார பெருமையையும் பிரதிபலிக்கிறது. கைவினை பொருள் அங்காடி, உணவுக்கூடம், பசுமை பகுதியுடன் கூடிய சிறுவர் விளையாடும் இடம் ஆகியவையும், 128 கார்கள் மற்றும் 340 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வாகன நிறுத்தங்கள் மற்றும் 8 பஸ் நிறுத்தங்கள் ஆகியவைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

4 பகுதிகளாக பிரிப்பு

குளோவர் இலை வடிவமைப்புப் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ளதால், இந்த இடம் இயற்கையாகவே 4 பகுதிகளாக பிரித்து மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பகுதி-1 ‘விமானநிலைய அணுகு பகுதி’ (நேரு சிலை அருகில்) இருக்கையுடன் கூடிய உணவுக் கூடங்கள், சில்லரை அங்காடிகள், பஸ் நிறுத்தம் மற்றும் வாகன நிறுத்தம். பகுதி-2 ‘போரூர் அணுகு பகுதி’ இதில் சிறார் விளையாடும் இடம், சில்லரை அங்காடிகள், பஸ் நிறுத்தம் மற்றும் வாகன நிறுத்தம். பகுதி-3 ‘ஈக்காட்டுத்தாங்கல் அணுகு பகுதி’ சில்லரை அங்காடிகள் மற்றும் பஸ் நிறுத்தம். பகுதி-4 ‘மொத்தமாக புல்வெளியுடன் மேம்படுத்தப்பட்ட பகுதிகளாகும்’

அனைத்து பகுதிகளிலும் சோலார் விளக்குகள், புல்வெளி விளக்குகள் மற்றும் அதிக வெளிச்சத்தை தரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதால், கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கம், சென்னை பெருநகர மக்கள் பெரிதும் விரும்பும் பகுதியாக அமைந்துள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story