தி.மு.க. அரசை கண்டித்து: சென்னையில் அ.தி.மு.க. சார்பில் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம்


தி.மு.க. அரசை கண்டித்து: சென்னையில் அ.தி.மு.க. சார்பில் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2021 10:02 PM GMT (Updated: 17 Dec 2021 10:02 PM GMT)

தி.மு.க. அரசை கண்டித்து, சென்னையில் 4 இடங்களில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தன. ராயபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பாடல் பாடி கண்டனக் குரலை எழுப்பினார்.

சென்னை,

விலைவாசி உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என்பது உள்பட தி.மு.க. அரசுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சென்னையில் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வடசென்னை தெற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஜெயக்குமார் தலைமையில் ராயபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டிக்கும் வகையில் மளிகைப்பொருட்கள், காய்கறி ஆகியவற்றை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டுக்கொண்டு டி.ஜெயக்குமாரும், அவருடன் இருந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

பாடல் பாடி கண்டனம்

ஆர்ப்பாட்டத்தின் போது, “டிங்கிரி... டிங்காலே... ஸ்டாலின் ஆட்சி டிங்கிரி... டிங்காலே... தலையில் துண்டு போட்டுக்கனும் தங்கமே தில்லாலே... கொடுப்பதாக கொடுத்த வாக்கு என்னங்கய்யா ஆச்சு... வாய்க்கு வந்த வாக்குறுதிய அள்ளி வீசினீங்க... தக்காளி விலையை பார்த்து வீட்டில் கலங்குறாங்க அம்மா... கோயம்பேடு மார்க்கெட்டுக்கு போறதெல்லாம் சும்மா....'' என்பது போன்ற பல்வேறு வரிகளை பாடலாக எழுதி, அதை பாடியபடி ஜெயக்குமார் கண்டனக்குரல் எழுப்பினார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் விரோத விடியா தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அவர்கள் பொறுப்பேற்ற 8 மாதங்களில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைகூட நிறைவேற்றவில்லை. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000, கல்விக்கடன் ரத்து, நீட் தேர்வு இருக்காது என்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார்கள் எதையும் செய்யவில்லை. பெட்ரோல்-டீசல் விலையை குறைக்காமல் தொடர்ந்து இந்த அரசு மவுனம் காக்கிறது. சட்டம்-ஒழுங்கும் மோசமாக இருக்கிறது.

பொய் வழக்குகள்

கோவை மாவட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கடத்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். மாணவ-மாணவிகளுக்கு ஒரு அரசு பாதுகாப்பு தரவில்லை என்றால், என்ன சொல்வது?. இது நெஞ்சை உலுக்குகின்ற, பெற்றோர் அஞ்சுகின்ற செயலாக உள்ளது. புயல், மழை, வறட்சி காலத்தில் ஓடோடி உதவி செய்த அ.தி.மு.க. அரசை போல, தி.மு.க. அரசு எதையும் செய்யவில்லை. ஆட்சியாளர்கள் மக்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காமல், அலட்சியப்போக்கோடு இருக்கிறார்கள். அ.தி.மு.க. வினர் மீது பொய்வழக்கு போடுகிறார்கள்

கருத்து சுதந்திரம் இந்த ஆட்சியில் ஒடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வினரையோ, தி.மு.க. குடும்பத்தையோ எதிர்த்தால் உடனடியாக குண்டர் சட்டம், போலியான வழக்குகள் போடுகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை பற்றி இந்த அரசு கண்டும் காணாத வகையில் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம்

இதேபோல், அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்தியா, ஆர்.எஸ்.ராஜேஷ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தலைமையிலும், வேளச்சேரியில் தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் எம்.கே.அசோக் தலைமையிலும் நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story