அரசு பஸ்- வேன் மோதல்; 3 பக்தர்கள் பலி பழனி கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்


அரசு பஸ்- வேன் மோதல்; 3 பக்தர்கள் பலி பழனி கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 23 Dec 2021 9:15 PM GMT (Updated: 23 Dec 2021 9:15 PM GMT)

காங்கேயம் அருகே அரசு பஸ்சும், வேனும் மோதிய விபத்தில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். பழனி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருப்பூர்,

சேலத்தை சேர்ந்த டிரைவர் அறிவழகன் என்கிற ராஜா (வயது 25). இவரது நண்பர்கள் செந்தில்குமார் (24), பிரபு (23), ஜெகன் (24), கோகுலகிருஷ்ணன் (18), கந்தசாமி (24), சபரிராஜா (25).

இதில் பிரபுவும், கோகுலகிருஷ்ணனும் கல்லூரி மாணவர்கள். கந்தசாமியும், சபரிராஜாவும் கூலி வேலை செய்து வருகிறார்கள்.

நண்பர்களான 7 பேரும் ஒரு வேனில் சேலத்தில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு சென்றனர். அங்கு தரிசனம் செய்து விட்டு கொடைக்கானல் சென்றனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

வேன்-பஸ் மோதல்

வேனை அறிவழகன் ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தாராபுரம் சாலையில் எண்ணெய் ஆலை அருகே அவர்களது வேன் வந்து கொண்டிருந்தது.

அப்போது சேலத்தில் இருந்து பழனி நோக்கி அரசு பஸ் சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் வேனும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் வேன் உருக்குலைந்தது. பஸ்சின் முன் பகுதியும் சேதம் அடைந்தது.

3 பேர் பலி

மேலும் இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த அறிவழகன், செந்தில்குமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் வேனுக்குள் இருந்த 5 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.

வேன் சின்னாபின்னமாகி இருந்ததால் நீண்ட போராட்டத்திற்கு பிறகு படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து ஜெகன், கோகுலகிருஷ்ணன், கந்தசாமி, சபரிராஜா ஆகிய 4 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story