புதிய வகை ரோஜாப்பூவுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்


புதிய வகை ரோஜாப்பூவுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்
x
தினத்தந்தி 24 Dec 2021 9:16 PM GMT (Updated: 24 Dec 2021 9:16 PM GMT)

புதிய வகை ரோஜாப்பூவுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்.

சென்னை,

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் முன்னணி தோட்டக்கலை நிபுணரும், ரோஜா வளர்ப்பாளருமான கொடைக்கானலை சேர்ந்த எம்.எஸ்.வீரராகவன், புதிய வகை ரோஜாப்பூவுக்கு இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தையான வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை கவுரவிக்கும் வகையில் அவரது பெயரை சூட்டி உள்ளார்.

இந்த ரோஜா வகையானது ஊதா நிறத்துடன் ஊக்கமளிக்கும் நறுமணத்துடன் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகும். இந்த ரோஜா செடி 4 முதல் 5 அடி வரை வளரும். கரும் பச்சையுடன் கூடி பெரிய இலைகளுடன் இந்த செடி காணப்படும்.

இந்த புதிய வகை ரோஜா செடி, மற்றொரு புதிய வகை ரோஜா செடியான மோன்கொம்பு ரோஜா செடி ஆகியவற்றை புதுடெல்லியைச் சேர்ந்த மலர் வளர்ப்பு விஞ்ஞானியும், மத்திய அரசின் தோட்டக்கலைத்துறை முன்னாள் இயக்குனருமான நரேந்திர தத்லானி, சென்னையில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் இல்லத்தில் அவரை சந்தித்து வழங்கினார்.

இந்திய ரோஜா செடிகள் என்ற பெயரில் அவர் எழுதிய புத்தகத்தையும் வழங்கினார். இந்த புத்தகம், இந்தியாவில் உள்ள ரோஜா செடிகள், அதன் வகைகள், வரலாறு மற்றும் வளர்ச்சி ஆகியவை குறித்த முதல் புத்தகம் என்று நரேந்திர தத்லானி தெரிவித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story