பரோலில் வந்த பேரறிவாளனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை


பரோலில் வந்த பேரறிவாளனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை
x
தினத்தந்தி 27 Dec 2021 6:40 AM GMT (Updated: 27 Dec 2021 6:55 AM GMT)

பரோலில் வெளியே வந்துள்ள பேரறிவாளனுக்கு தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தருமபுரி ,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்சிறுநீரகத் தொற்று, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் காரணமாக  பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. 

அவரது தாயார் அற்புதம்மாள் ஒவ்வொரு மாதமும் பரோல் காலம் முடியும் தருவாயில் மீண்டும் பரோல் நீட்டிக்க கோரி தமிழக அரசுக்கு மனு அளித்து வந்தார். அதன்படி இதுவரை 7 முறை பரோல் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மேலும் பரோல் நீட்டிக்க மனு அனுப்பி இருந்தார். அதனை பரிசீலித்த தமிழக அரசு பேரறிவாளனுக்கு 8-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. 

துரதிர்ஷ்டவசமாக பரோலில் வெளியே வந்திருந்த பேரறிவாளனுக்கு மீண்டும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து,  சிகிச்சைக்காக அவர் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் தலைமையில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

இந்த நிலையில், தற்பொழுது அவர் தருமபுரியில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story