கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 30 Dec 2021 11:45 PM GMT (Updated: 30 Dec 2021 11:45 PM GMT)

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகம் வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் ஆண்டின் அதிக மழைப்பொழிவை பெறும். அந்த வகையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டியது. இதனால் தமிழகத்தில் இயல்பை தாண்டிய மழை பதிவானது. இதற்கிடையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மழை சற்று குறைந்து, பனித்தாக்கம் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு, சில இடங்களில் கன மழைக்கான அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ளது. அதிலும் புத்தாண்டை சில இடங்கள் மழையோடு வரவேற்க காத்திருக்கிறது.

அந்தவகையில் தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (வெள்ளிக்கிழமை) கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், புத்தாண்டு தினமான நாளை (சனிக்கிழமை) கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 

நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) வரை செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story