சுற்றுலா பயணிகள் வருகையால் களை கட்டிய புதுச்சேரி


சுற்றுலா பயணிகள் வருகையால் களை கட்டிய புதுச்சேரி
x
தினத்தந்தி 6 Feb 2022 2:41 PM GMT (Updated: 6 Feb 2022 2:41 PM GMT)

சுற்றுலா பயணிகள் வருகையால் புதுச்சேரி களை கட்டியது

புதுச்சேரி
சுற்றுலா பயணிகள் வருகையால் புதுச்சேரி களை கட்டியது.

சுற்றுலா பயணிகள்

புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதன்படி இன்று  விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன.
சுற்றுலா பயணிகள் வருகை எதிரொலியாக சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடற்கரை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக கடற்கரை சாலையில் தலைமை செயலகம் எதிரே உள்ள செயற்கை மணல் பரப்பு, பழைய துறைமுக பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

புதுச்சேரி நகர பகுதியில்  ஏராளமான வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் உலா வந்தன. இன்று  முகூர்த்தநாள் என்பதாலும், சுற்றுலா பயணிகள் வருகையாலும் நகரின் முக்கிய வீதிகளான அண்ணாசாலை, நேருவீதி, புஸ்சி வீதி, கடலூர் சாலை, மரப்பாலம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு பணி காரணமாக  குழந்தைகள் ரெயில் இயக்கப்படவில்லை. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒயிட் டவுன் பகுதியில் உள்ள கட்டிடங்களில் வரைந்துள்ள ஓவியங்களின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

சண்டே மார்க்கெட்

சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர்.
 

Next Story