திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
x
தினத்தந்தி 6 Feb 2022 9:19 PM GMT (Updated: 6 Feb 2022 9:19 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா இன்று (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கி, வருகிற 18-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 7-ம் திருநாள் 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்திலும், 8-ம் திருநாள் அன்று அதிகாலையில் சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்திலும், பின்னர் பகலில் பச்சை சாத்தி கோலத்திலும் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

10-ம் திருநாளான 16-ந் தேதி (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

கொடிப்பட்டம் வீதிஉலா

மாசித்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. இதையொட்டி திருச்செந்தூர் வடக்கு ரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் 12-ம் திருவிழா மண்டபத்தில் சிதம்பர தாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

பின்னர் யானை மீது அரிஹர சுப்பிரமணியன் அய்யர் அமர்ந்து பிடித்தவாறு கொடிப்பட்டம் 8 வீதிகளிலும் உலா வந்தது.

Next Story