வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவி தொலைந்ததால் பரபரப்பு பூட்டை அறுத்து திறந்தனர்


வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவி தொலைந்ததால் பரபரப்பு பூட்டை அறுத்து திறந்தனர்
x
தினத்தந்தி 22 Feb 2022 9:04 PM GMT (Updated: 22 Feb 2022 9:04 PM GMT)

கடலூர் மாநகராட்சி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவி தொலைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து எந்திரம் மூலம் பூட்டை அறுத்து அறை திறக்கப்பட்டது.

கடலூர்,

கடலூர் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான, கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையை திறப்பதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் விஸ்வநாதன், வட்டார தேர்தல் அலுவலர் ரஞ்சித் சிங் ஆகியோர் வந்தனர்.

சாவியை காணவில்லை

அப்போது அந்த பாதுகாப்பு அறையில் 2 பூட்டுகள் பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து பூட்டுகளில் இருந்த சீல் அகற்றப்பட்டு சாவியை வைத்து ஒவ்வொரு பூட்டாக திறக்க முற்பட்டனர். ஆனால் அதில் ஒரு பூட்டு மட்டுமே திறக்கப்பட்டது. மற்றொரு பூட்டின் சாவி திறக்கப்படவில்லை. அந்த சாவி மாறியதாகவும், அந்த பூட்டுக்குரிய சாவி தொலைந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து அலுவலர்கள் சாவியை தேடி அலைந்தனர். இருப்பினும் சாவி கிடைக்கவில்லை.

பூட்டு அறுப்பு

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். பின்னர், வேட்பாளர்கள் முன்னிலையில் ‘ஆக்சா பிளேடு’ மற்றும் அறுவை எந்திரம் மூலம் பூட்டு அறுத்து அறை திறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 40 நிமிடம் தாமதமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

Next Story