‘டிரோன்’ மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்


‘டிரோன்’ மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 28 Feb 2022 9:17 PM GMT (Updated: 28 Feb 2022 9:17 PM GMT)

சென்னை நீர்நிலைகளில் ‘டிரோன்’ மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

 சென்னை,

சென்னையில் உள்ள நீர்நிலைகளில் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ‘டிரோன்’ (ஆளில்லா குட்டி விமானம்) மூலம் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பணியை சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள பக்கிங்காம் கால்வாயில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது மயிலாப்பூர் எம்.எல்.ஏ. த.வேலு, தென் சென்னை தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

3,463 பணியாளர்கள்

சென்னை மாநகராட்சியின் சார்பில் கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் 3,463 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த பணியாளர்களின் மூலம் 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் எந்திரங்கள். 251 கையினால் கொண்டு செல்லும் புகைப்பரப்பும் எந்திரங்கள் மற்றும் 9 சிறிய வகை புகைப்பரப்பும் எந்திரங்களை கொண்டு நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் குடிசைப்பகுதிகள் மற்றும் கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் புகைப்பரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக்கால்வாய்களில் கொசுப்புழுக்களின் உற்பத்தியை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த 224 கைத்தெளிப்பான்கள், 371 பேட்டரி மூலம் இயங்கக்கூடிய கைத்தெளிப்பான்கள் மற்றும் 129 விசைத்தெளிப்பான்கள் மூலம் கொசு கொல்லி மருந்து தெளிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

113 கி.மீட்டர்

நீர்வழிக்கால்வாய்களில் கொசு மருந்து தெளிக்கும்போது ஏற்படுகின்ற நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு கடந்த ஆகஸ்டு மாதம் தமிழ்நாடு வான்வழி வாகன கழகத்துடன் இணைந்து சோதனை முறையில் ‘டிரோன்’ மூலம் கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டன. தற்சமயம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவு கொசுக்கள் இருப்பதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மீண்டும் ‘டிரோன்’ மூலம் நீர்வழிக்கால்வாய்களில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

சென்னையில் உள்ள அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய் போன்ற கால்வாய்கள் மற்றும் 31 சிறிய கால்வாய்களில் ‘டிரோன்’ பயன்படுத்தி சுமார் 113 கி.மீ. தூரத்துக்கு கொசுப்புழு கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ‘டிரோன்’ பயன்படுத்துவதன் மூலம் குறைவான கொசுப்புழு கொல்லி மருந்துகளை பயன்படுத்தி அதிக பரப்பளவில் தெளிக்கவும், மனித ஆற்றல் பயன்படுத்த முடியாத இடத்திலும் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளவும் எளிதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்கள் டாக்டர் எஸ்.மனிஷ், சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், ஷேக் அப்துல் ரகுமான் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story