‘பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்’ என்ற தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?


‘பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்’ என்ற தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?
x
தினத்தந்தி 8 March 2022 12:28 AM IST (Updated: 8 March 2022 12:28 AM IST)
t-max-icont-min-icon

‘பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்’ எனும் தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? என்று ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் போக்குவரத்து பணியாளர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த தி.மு.க., ஆட்சியமைத்து 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல், ஓய்வு பெற்றவர்களுக்கு அளிக்க வேண்டிய ஓய்வூதிய பயன்களையும், அகவிலைப்படியையும்கூட தராமல் இழுத்தடிக்கிறார்கள்.

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுப்புத்தொகை ஏதும் வழங்கப்படாமல் உள்ளன. கொரோனா பரவல் குறைந்து விட்டதால் ஓய்வூதிய பயன்கள் விரைவில் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் தங்கள் குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் போன்றவற்றை கடன் வாங்கி போக்குவரத்து தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

கேள்விக்குறியான தேர்தல் வாக்குறுதி

இப்போது வாங்கிய கடனுக்கான வட்டியை கூட செலுத்த முடியாத துர்பாக்கிய நிலைமைக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் ஓய்வூதிய பயன்கள் வந்தவுடன் தங்கள் குழந்தைகளுக்கு திருமணத்தை நடத்த உத்தேசித்துள்ளனர். இன்னும் சிலர் மருத்துவத்துக்கு பணமில்லாமல் அவதிப்படுகிறார்கள். தற்போது பணியில் உள்ளவர்கள், தங்களுக்கும் நாளை இதே நிலைமை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

நியாயமாக, சட்டப்படி கொடுக்க வேண்டிய ஓய்வு கால பயன்களையும், அகவிலைப்படியையுமே அளிக்காத நிலையில், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் என்ற தி.மு.க. அரசின் வாக்குறுதி கேள்விக்குறியாகிவிட்டது. இந்த வாக்குறுதி போக்குவரத்து தொழிலாளர்களின் வாக்குகளை பெறுவதற்காகத்தான். தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற மனநிலைக்கு போக்குவரத்து தொழிலாளர்களும், ஓய்வூதியதாரர்களும் வந்துவிட்டார்கள்.

ஓய்வுகால பலன்கள்

இருந்தாலும் சட்டப்படி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுப்பு ஊதியம் ஆகியவை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். இதற்கான நிதி அரசு போக்குவரத்து கழகங்களில் இல்லை என்றாலும், இதற்கு தேவையான நிதியை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.

எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வுகால பயன்களை உடனடியாக வழங்க ஆவன செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story