தமிழகத்தில் 21.21 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போட திட்டம்


தமிழகத்தில் 21.21 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போட திட்டம்
x
தினத்தந்தி 16 March 2022 3:41 AM IST (Updated: 16 March 2022 3:41 AM IST)
t-max-icont-min-icon

12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி தமிழகத்தில் 21.21 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போட திட்டம்.

சென்னை,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதுவரை தமிழகத்தில, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 கோடியே 33 லட்சத்து 8 ஆயிரத்து 622 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் (91.92 சதவீதம்), 4 கோடியே 31 லட்சத்து 26,914 பேருக்கு 2-வது தவணை (74.54 சதவீதம்) தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 28 லட்சத்து 14,175 பேருக்கு முதல் தவணையும் (84 சதவீதம்), 18 லட்சத்து 67,576 பேருக்கு 2-வது தவணை (56 சதவீதம்) தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. மேலும், 7 லட்சத்து 3 ஆயிரத்து 293 பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (புதன்கிழமை) தொடங்கவுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது:-

“12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தும் பணி சென்னை அசோக்நகரில் இன்று தொடங்குகிறது. படிப்படியாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும். இந்த வயதுக்குட்பட்ட சுமார் 21.21 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோர்பேவேக்ஸ் தடுப்பூசி 2 தவணைகளாக செலுத்தப்படும். முதல் தவணைக்கும் 2-வது தவணைக்கும் இடையில் 28 நாட்கள் கால இடைவெளியாகும்”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story