விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு: கைதான 8 பேரில் 4 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 March 2022 1:35 PM IST (Updated: 26 March 2022 1:35 PM IST)
t-max-icont-min-icon

ஶ்ரீவில்லிபுத்தூர் கிளைச்சிறையில் இருக்கும் 4 பேர் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை, 

விருதுநகரில் 22 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 4 பேர் சிறுவர்கள் என்பதால் கூர்நோக்கு இல்லத்திலும், ஹரிஹரன், ஜீனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா, வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு வினோதினியிடம் நேற்று முன்தினம் ஒப்படைத்தார்.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி நேற்று விருதுநகர் வந்தார். அவர் சமூகநலத்துறையின் கண்காணிப்பில் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள, பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணிடம் நேரில் விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து விருதுநகர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ பரிசோதனை அறிக்கைகளையும் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. 

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். கோர்ட்டு அனுமதி கிடைத்ததும் அவர்கள் 4 பேரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கில் கைதான 8 பேரில் 4 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறையில் இருக்கும் ஹரிஹரன், ஜீனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேர் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விருதுநகர் பாலியல் சம்பவத்தில் கைதான 8 பேரின் வீடுகளில் சிபிசிஐடி சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story