ஜல்லிக்கட்டு போட்டியில் தடுப்பு வேலிகளை உடைத்து ரகளை: கல்வீச்சு-போலீஸ் தடியடியால் பரபரப்பு


ஜல்லிக்கட்டு போட்டியில் தடுப்பு வேலிகளை உடைத்து ரகளை: கல்வீச்சு-போலீஸ் தடியடியால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 April 2022 7:47 PM GMT (Updated: 10 April 2022 7:47 PM GMT)

திருமங்கலம் அருகே தடுப்பு வேலிகளை உடைத்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் ஜல்லிக்கட்டு போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட ரகளையால் போலீசார் தடியடி நடத்தினர்.

மதுரை,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் சுந்தரராஜ பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது.

இந்தநிலையில் வாடிவாசலுக்கு செல்லும் தடுப்பு வேலிகள் உடைக்கப்பட்டு வெளியே இருந்து மற்ற காளைகளை உள்ளே கொண்டுவர அதன் உரிமையாளர்கள் முயற்சித்தனர். இதனால் உடைக்கப்பட்ட தடுப்பு வேலி வழியாக சுமார் 30-க்கும் மேற்பட்ட காளைகள் மைதானத்துக்குள் பாய்ந்து ஓடின. உடைந்த வேலி வழியாக சிலர் புகுந்தனர்.

இதை தடுக்க முயன்ற போலீசாருக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டி நிறுத்தப்பட்டது.

பின்னர் அதிகாரிகள், விழா கமிட்டியினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமார் அரைமணி நேரம் தாமதமாக மதியம் 2 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் மீண்டும் தொடங்கின. அப்போது காளை உரிமையாளர்களிடம் டோக்கன்களை சோதனை செய்தபோது போலி டோக்கன்கள் இருப்பது தெரியவந்தது. இதை பார்த்து விழா கமிட்டியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

தள்ளுமுள்ளு

இதனால் அந்த காளைகளுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் விழா கமிட்டியினருடன் தகராறில் ஈடுபட்டனர். சிலர் டோக்கனுக்கு உரிய நகல்கள் எடுத்துக்கொண்டு வரவில்லை என கூறி பிறவாடி வழியாக உள்ளே புகுந்தனர். அப்போது காளை உரிமையாளர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் மீண்டும் 2.30 மணிக்கு ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டது. அப்போது ஏராளமான மாடுகள் அவிழ்த்து விடப்படாமல் இருந்தன.

மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க கோரினர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மாட்டின் உரிமையாளர்கள் பிறவாடி வழியாக மாட்டை அவிழ்த்து விட்டனர். இந்த மாடுகள் பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்ததால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் காளைகள் முட்டியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கல்வீச்சு-தடியடி

மேலும் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் மாடுகளுக்கு பரிசு வழங்கவில்லை என கூறி சிலர் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் மேடையை நோக்கி கற்களை வீசினர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

மேடையை நோக்கி கற்கள் வீசப்பட்டதால் அதில் இருந்து தப்பிக்க முயன்ற போது திருமங்கலம் தாசில்தார் அனந்தகிருஷ்ணன் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதை தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி கல்வீச்சில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதில் பலர் காயம் அடைந்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.

Next Story