சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் ஒருவர் கூட சிகிச்சையில் இல்லை


சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் ஒருவர் கூட சிகிச்சையில் இல்லை
x
தினத்தந்தி 12 April 2022 11:14 PM GMT (Updated: 12 April 2022 11:14 PM GMT)

சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் ஒருவர் கூட சிகிச்சையில் இல்லை. இதனால் டாக்டர்கள், நர்சுகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந் தேதி காஞ்சீபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்தது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உச்சம்பெற தொடங்கியது.

தமிழகத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயரத்தொடங்கியதால், சிறப்பு கொரோனா வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, படுக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

படுக்கை, ஆக்சிஜன்

நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதால், ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிந்தன. படுக்கைகள், ஆக்சிஜன் கிடைக்காமல் ஆஸ்பத்திரி வாசல்களிலும், ஆம்புலன்ஸ் வாகனத்திலும் கொரோனா நோயாளிகள் தவம் கிடந்தனர். தினசரி 100-க்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகள், உயிரிழந்தவர்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்ய முடியாத அந்தந்த குடும்பத்தினர் தவிப்பு என ஒவ்வொரு நாளையும் கொரோனா கண்ணீருடனே நகர்த்தி சென்றது.

அந்த வகையில் முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை என தமிழகத்தில் இதுவரை 34 லட்சத்து 53 ஆயிரத்து 112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் 7 லட்சத்து 51 ஆயிரத்து 212 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

சிகிச்சையில் யாரும் இல்லை

தற்போது கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் 50-க்கு கீழ் குறைந்தே காணப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில் கொரோனா வார்டுகளில் படுக்கைகள் காலியாக கிடைக்கின்றன.

2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, சென்னையில் உள்ள ஓமந்தூரார், ராஜீவ்காந்தி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, கிண்டி கொரோனா உள்பட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் ஒரு கொரோனா நோயாளிகள் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அனைவரும் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சென்னையில் நேற்று எந்த அரசு ஆஸ்பத்திரியிலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் இல்லாததால், டாக்டர்கள், நர்சுகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story