தமிழக அரசு இணையத்தில் இந்தி: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம்தென்னரசு பதில்


தமிழக அரசு இணையத்தில் இந்தி: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம்தென்னரசு பதில்
x
தினத்தந்தி 17 April 2022 9:12 PM GMT (Updated: 17 April 2022 9:12 PM GMT)

தமிழக அரசு இணையத்தில் இந்தி தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

சென்னை,

உள்துறை மந்திரி அமித்ஷா, ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை பயன்படுத்துங்கள் என்று சொன்னவுடனேயே, நம்முடைய முதல்-அமைச்சர், உள்துறை மந்திரியின் இந்த கருத்து இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் செயல் என்றும், ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது, ஒருமைப்பாட்டையும் உருவாக்காது எனவும் தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் தனது நிலைப்பாட்டினை உறுதிபட தெரிவித்தார்.

கண்டனம்

ஆனால், இன்றைக்கு மொழி பிரச்சினையை எடுத்துக்கொண்டு வீராவேசமாக அறிக்கை விடும் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றத்தில் தனக்கு பக்கத்திலேயே எதிர்க்கட்சித்தலைவராக அமர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமி உள்துறை மந்திரியின் இந்த கருத்து குறித்து தனக்கு ‘ஒன்றுமே தெரியாது’ என நழுவிக்கொண்டதை மட்டும் ஏன் வசதியாக மறந்து விட்டார் என தெரியவில்லை.

உண்மையான தமிழ் உணர்வும், அக்கறையும் இருக்குமானால் எடப்பாடி பழனிசாமியின் இந்த பாசாங்கு செயலைத்தான் ஓ.பன்னீர்செல்வம் கண்டித்திருக்க வேண்டுமே அல்லாமல் முதல்-அமைச்சர் மீது உள்நோக்கம் கற்பிக்க முனைந்திருப்பது கண்டனத்திற்குரிய செயலாகும். பன்னீர்செல்வம் உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் தோற்றுவிப்பது குறித்தும் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

நினைவூட்ட விரும்புகிறேன்

முதல்-அமைச்சர் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகுதான் ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறைக்கு ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது என்பதனையும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் கருணாநிதி பெயரில் செம்மொழித்தமிழ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர், செம்மொழி சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாக தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக் கழகங்களில் ‘செம்மொழி தமிழ் இருக்கைகள்’ அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருப்பதையும் அவருக்கு நான் நினைவூட்டக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.

இந்தி ஏன்?

இத்தகைய ஆய்வு முடிவுகளையும், அவை சார்ந்த அறிவிப்புகளையும் சமூகநீதி சார்ந்த முன்னெடுப்புகளையும் தமிழ் கூறும் நல்லுலகமும், ஆய்வு நெறி சார்ந்த அறிஞர்களும் மட்டுமின்றி இந்திய அளவில் வெகுமக்களும் தெரிந்து கொள்ள வகை செய்யும் வண்ணம்தான் செய்தி- மக்கள் தொடர்புத்துறை பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள் தவிர்த்து ஏனைய நூல்கள் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அன்றைய முதல்-அமைச்சரால் 19-02-2019 அன்று வெளியிடப்பட்டதை ஓ.பன்னீர்செல்வம் மறந்திருந்தாலும் இத்தகைய அறிக்கைகளை வெளியிடும் முன்னர் தனது பழைய நண்பர் அன்றைய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story