கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் "திடீர்" தாழ்வு - திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து..!


கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் திடீர் தாழ்வு - திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து..!
x
தினத்தந்தி 20 April 2022 6:05 AM GMT (Updated: 20 April 2022 6:05 AM GMT)

கன்னியாகுமரி கடல் நீர் திடீரென உள்வாங்கியதால் கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் திருவள்ளுவர் சிலையும் காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். 

இவற்றை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த3 படகுகளும் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது. 

நேற்று காலையில் "திடீர்" என்று கடல் சீற்றம் ஏற்பட்டதால் படகு போக்குவரத்து காலையில் ரத்து செய்யப்பட்டது. பின்னர் கடல் சீற்றம் தணிந்ததைத் தொடர்ந்து 2 மணி நேரம் தாமதத்துக்குப் பிறகு காலை 10 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கி தொடர்ச்சியாக மாலை 4 மணி வரை நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று கடல் நீர்மட்டம் "திடீர்"என்று தாழ்வானது. இதைதொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து இதுவரை தொடங்கப்படவில்லை. படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடல் நடுவே அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் நேரில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்

கடல் நீர் மட்டம் தாழ்ந்து காணப்பட்டதால் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரைப் பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது.

இதனால் அந்த பகுதியில் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதைக் கண்டு அச்சமடைந்த சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி கால் நினைப்பதற்கே தயங்கினர். கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி வந்து சுற்றுலா பகுதி போலீஸார் சுற்றுலா பயணிகளை கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதித்தனர்.


Next Story