மலைவாழ் மக்களுக்கு மின் வினியோகம் வழங்கப்படுமா? அ.தி.மு.க. உறுப்பினருக்கு அமைச்சர் பதில்


மலைவாழ் மக்களுக்கு மின் வினியோகம் வழங்கப்படுமா? அ.தி.மு.க. உறுப்பினருக்கு அமைச்சர் பதில்
x
தினத்தந்தி 20 April 2022 10:48 PM GMT (Updated: 20 April 2022 10:48 PM GMT)

வன விலங்குகள் இடையூறுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் மின் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில், உறுப்பினர் பொன்னுசாமி (சேந்தமங்கலம்), ‘கொல்லிமலை பகுதியில் மின்கம்பிகளை பூமிக்கடியில் புதைவடங்களாக மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?' என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்து கூறியதாவது:-

மலை பகுதிகளில் மின்பாதைகளை புதைவடங்களாக அமைப்பதில் நிறைய சிக்கல் இருக்கிறது, செலவினமும் அதிகம். கொல்லிமலையில் மலைக்குன்றுகள் அதிகம், 70 கொண்டை ஊசி வளைவு பகுதிகள் இருக்கிறது.

எனவே சாத்தியக்கூறுகள் இல்லை.சென்னையில் தற்போது புதைவட கம்பிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்த பிறகு, உறுப்பினர் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

வால்பாறை

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர் அமுல் கந்தசாமி (வால்பாறை), ‘வால்பாறை தொகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் மலைவாழ் மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். அந்த மலைவாழ் மக்களுக்கு மின்சாரம் கிடையாது. வன விலங்களும் அவர்களுக்கு இடையூறு தந்து கொண்டிருக்கிறது. எனவே அந்த மக்களுக்கு மின்சாரம் வழங்குவதில் தடை ஏதும் இருக்குமானால் சோலார் விளக்கு அல்லது எல்.இ.டி. விளக்கு அமைக்க இந்த அரசு ஆவணம் செய்யுமா?' என துணைக்கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி, ‘உறுப்பினர் சுட்டிக்காட்டி இருக்கிற பகுதியில் எங்கள் துறையின் அதிகாரிகளை அனுப்பி, ஆய்வு செய்யப்பட்டு சாத்தியக்கூறுகள் அடிப்படையில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்' என்றார்.

Next Story