நடிகர் சூரி புகாரில் முன்னாள் டி.ஜி.பி. மீது மோசடி வழக்குப்பதிவு


நடிகர் சூரி புகாரில் முன்னாள் டி.ஜி.பி. மீது மோசடி வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 21 April 2022 11:16 PM GMT (Updated: 21 April 2022 11:16 PM GMT)

நிலம் வாங்கி தருவதாக ரூ.2.70 கோடியை சுருட்டிவிட்டதாக காமெடி நடிகர் சூரி கொடுத்த புகார் அடிப்படையில், முன்னாள் டி.ஜி.பி. மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

பிரபல காமெடி நடிகர் சூரி சென்னை அடையாறு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார். சென்னையை அடுத்த சிறுசேரியில், நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.2.70 கோடி பண மோசடி செய்துவிட்டதாக முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ்கொடவாலா, சினிமா தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோர் மீது அந்த புகார் மனுவில் குற்றம் சாட்டி இருந்தார். முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ்கொடவாலா நடிகர் விஷ்ணுவிஷாலின் தந்தை ஆவார். ரமேஷ்கொடவாலா தன் மீதான புகாரை மறுத்தார்.

இந்த நிலையில் இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி 6 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நடிகர் சூரியின் புகார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில், துணை கமிஷனர் மீனா, உதவி கமிஷனர் ஜான்விக்டர் ஆகியோர் நேரடியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சூரியிடம் 2-வது முறையாக விசாரணை

நடிகர் சூரியிடம் கடந்த மாதம் துணை கமிஷனர் மீனா, உதவி கமிஷனர் ஜான்விக்டர் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடிகர் சூரியிடம் 2-வது முறையாக விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் 100 கேள்விகள் கேட்டு அதிரடி விசாரணை நடந்தது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்று போலீசார், சூரியிடம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சூரிக்கு வாங்கி தருவதாக சொன்ன குறிப்பிட்ட நிலம் உள்ள சிறுசேரி பகுதிக்கும் நேரில் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மோசடி வழக்குப்பதிவு

இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

நடிகர் சூரி கொடுத்த புகார் அடிப்படையில், முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ்கொடவாலா, சினிமா தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சூரியிடம் நிறைய தகவல்கள் பெற வேண்டி உள்ளது. முன்னாள் டி.ஜி.பி.க்கு இதில் எந்த அளவுக்கு தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வருகிறோம். சூரிக்கு கொடுக்க வேண்டிய ரூ.2.70 கோடி பணத்தில், ரூ.1.30 கோடி கொடுக்கப்பட்டு விட்டது. கொடுக்க வேண்டியது ரூ.1.40 கோடிதான். சூரியிடம் விசாரணை முடிக்கப்பட்டவுடன், முன்னாள் டி.ஜி.பி. மற்றும் சினிமா தயாரிப்பாளருக்கு உரிய சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நடிகர் சூரி போலீஸ் விசாரணையின்போது, சரியான தகவல்களை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. சினிமா காமெடி போல, சில சமயம் அவரது பதில் இருந்ததாகவும், இதனால்தான் அவரிடம் மீண்டும், மீண்டும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது என்றும் போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள்.

Next Story