தமிழகத்தில் ‘திடீர்’ மின்தடையால் மக்கள் அவதி பிரச்சினை ஏன்? அமைச்சர் விளக்கம்


தமிழகத்தில் ‘திடீர்’ மின்தடையால் மக்கள் அவதி பிரச்சினை ஏன்? அமைச்சர் விளக்கம்
x
தினத்தந்தி 21 April 2022 11:19 PM GMT (Updated: 21 April 2022 11:19 PM GMT)

தமிழகத்தில் பல மாவட்டங்களில் திடீர் மின்தடை பிரச்சினையால் மக்கள் அவதி அடைந்தனர். மின்தடைக்கான காரணம் குறித்து அமைச்சர் வி.செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

இந்தியாவில் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில், 54 சதவீதம் நிலக்கரி மூலம் இயங்கும் அனல்மின் நிலையங்கள் மூலமாக கிடைக்கிறது. இந்த ஆண்டு, நாடு முழுவதும் பருவமழை நல்ல மழைப்பொழிவை தந்ததால், நிலக்கரி சுரங்களில் தண்ணீர் புகுந்து உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், நிலக்கரிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு குறைக்கப்பட்டு வருகிறது. மேலும், நிலக்கரி தட்டுப்பாட்டால் மாநிலங்களில் உள்ள அனல் மின் நிலையங்களிலும், மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வடமாநிலங்களில் மின்வெட்டு பிரச்சினை தலைத்தூக்கி உள்ளது.

தமிழகத்தில் மின்வெட்டு

இந்நிலையில் தமிழகத்தில் கடலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்பட பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு திடீர் மின்தடை ஏற்பட்டது. தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் வேளையில், இந்த மின் தடை மக்களை பரிதவிக்க வைத்தது.

மின்விசிறி போன்ற மின்னணு சாதனங்களை இயக்க முடியாததால், இரவு புழுக்கத்தால் மக்கள் தூக்கமின்றி துயரம் அடைந்தனர். மின்சாரம் எப்போது வரும்? என்று ஏங்கி தவித்தனர். மின்சார வாரிய அலுவலகங்களுக்கு இடைவிடாமல் புகார்கள் வந்ததால், அலுவலக தொலைபேசி அழைப்பு சப்தம் ஒலித்துக்கொண்டே இருந்தன. பதிலளிக்க முடியாமல் மின்சார ஊழியர்களும் திண்டாடினர். மின்சாரம் வரும்.. வரும்.. என்று எதிர்பார்த்து காத்திருந்தும் வராததால், பொறுமை இழந்த மக்கள் மின்சார வாரிய அலுவலகத்துக்கு நேரடியாக சென்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறின.

அமைச்சர் வி.செந்தில் பாலாஜி விளக்கம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோருடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில், மின் வெட்டு பிரச்சினை குறித்து மக்கள் புகார்களை பதிவு செய்தனர். இந்நிலையில் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று முன்தினம் இரவு 11.28 மணியளவில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், மின் தடைக்கான காரணம் குறித்து விளக்கி கூறியதாவது:-

மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென தடைபட்டது. இதன் காரணமாக, சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித் திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால், நகர்ப்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரக பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பையடுத்து மின்தடை பிரச்சினை படிபடியாக தீர்ந்தது. அதன்பின்னர் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

அதிகாரி தகவல்

மின்தடை பிரச்சினை குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் தினசரி மின்சார தேவை 17 ஆயிரம் மெகாவாட் ஆகும். இதில் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 6,500 முதல் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு திடீரென்று 4,909 மெகாவாட்டாக குறைக்கப்பட்டது. எனவே, இந்த பற்றாக்குறையே அறிவிக்கப்படாத மின் தடைக்கு முக்கிய காரணம் ஆகும்.

சூரிய ஒளி மின் சக்தி (சோலார்) மூலம் 3 ஆயிரத்து 33 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. மேலும், தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு மின் தடை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story