போதுமான நிலக்கரி கிடைப்பதற்கு உதவிட வேண்டும்; பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


போதுமான நிலக்கரி கிடைப்பதற்கு உதவிட வேண்டும்; பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 22 April 2022 10:01 AM GMT (Updated: 22 April 2022 1:10 PM GMT)

தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் தடையில்லா மின் வினியோகத்தை பராமரிக்க நாளொன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

ஒடிசாவில் உள்ள தல்சர் சுரங்கங்களில் இருந்து போதுமான நிலக்கரி தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்க வேண்டியது அவசியமானது. தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், தற்போது தினசரி நிலக்கரி வரத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு மட்டுமே உள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடைகால மின் தேவையை பூர்த்தி செய்திட நிலக்கரி உற்பத்தி போதுமானதாக இருந்தாலும், ரெயில்களில் ரேக்குகளின் பற்றாக்குறை காரணமாக, அது துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதில்லை. இதன் விளைவாக, தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு கவலை கொள்ளத்தக்க அளவிற்கு எட்டியுள்ளது.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை பொறுத்தவரை, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களுக்கு நாளொன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை எடுத்துச்செல்ல 22 ரெயில்வே ரேக்குகள் தேவைப்படுகின்றன. இருப்பினும், ஒரு நாளைக்கு சராசரியாக 14 ரேக்குகள் மட்டுமே தற்போது ரெயில்வேயால் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், உள்நாட்டு நிலக்கரிப் பற்றாக்குறை காரணமாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தடையற்ற மின் விநியோகத்தைப் பராமரிப்பதற்காக, அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இது கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதாரத்தை கணிசமாக பாதிக்கும். இந்த நிலை உடனடியாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில், எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, நாளொன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். இந்த நடவடிக்கையால் மட்டுமே தமிழ்நாட்டில் தடையில்லா மின் விநியோகத்தைப் பராமரிக்க முடியும். எனவே இந்த விஷயத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story