வருகிற 30-ந் தேதி முதல் உத்தரபிரதேசத்தில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்


வருகிற 30-ந் தேதி முதல் உத்தரபிரதேசத்தில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 25 April 2022 11:52 PM GMT (Updated: 25 April 2022 11:52 PM GMT)

உத்தரபிரதேசத்தில் இருந்து கேரளாவுக்கு சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் வருகிற 30-ந் தேதி முதல் இயக்கப்படுகின்றன.

சேலம்,

சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ரெயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க ரெயில்வே நிர்வாகம் கோடை காலத்தில் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அதன்படி உத்தரபிரதேசம் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு சேலம் வழியாக கோரக்பூர்-எர்ணாகுளம் (வண்டி எண்-05303) என்ற சிறப்பு ரெயில் வருகிற 30-ந் தேதி முதல் ஜூன் மாதம் 25-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. 

கோரக்பூர் ரெயில் நிலையத்தில் 30-ந் தேதி காலை 8.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் கான்பூர், நாக்பூர், வாராங்கல், விஜயவாடா, தெனாலி, நெல்லூர், கூடூர், பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மே 2-ந் தேதி அதிகாலை 4.02 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் அங்கிருந்து 4.05 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், அலுவா வழியாக மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கமான எர்ணாகுளத்தில் இருந்து எர்ணாகுளம்-கோரக்பூர் சிறப்பு ரெயில் (வண்டி எண்-05304) மே மாதம் 2-ந் தேதி முதல் ஜூன் மாதம்27-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. 2-ந் தேதி இரவு 11.55 மணிக்கு இந்த ரெயில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 7.22 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் அங்கிருந்து 7.25 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், நெல்லூர், தெனாலி, விஜயவாடா, வாராங்கல், நாக்பூர், கான்பூர் வழியாக 5-ந் தேதி காலை 8.35 மணிக்கு கோரக்பூர் சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story