விசாரணைக்கு வருபவர்களை துன்புறுத்தக்கூடாது போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு


விசாரணைக்கு வருபவர்களை துன்புறுத்தக்கூடாது போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 May 2022 7:00 PM GMT (Updated: 4 May 2022 7:00 PM GMT)

புகார் மீதான விசாரணைக்கு ஆஜராகும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என்று தமிழ்நாடு போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் விஜயலட்சுமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், எனக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை என்ற பெயரில் சோழவரம் போலீசார் துன்புறுத்துகின்றனர். எனவே, என்னையோ, என் குடும்பத்தினரையோ துன்புறுத்தக் கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. போலீசில் தரப்பில், சம்பத்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மனுதாரரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது அந்தப் புகார் நிலுவையில் உள்ளது. மனுதாரரை ஒருபோதும் துன்புறுத்தவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

வேடிக்கை பார்க்காது

அதையடுத்து நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இதேபோன்ற கோரிக்கையுடன் பல வழக்குகள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படுகின்றன. பொதுவாக போலீஸ் புலன் விசாரணையில் தலையிட முடியாது. இருந்தாலும், விசாரணை என்ற பெயரில் ஒருவரை போலீசார் துன்புறுத்துவதாக கூறும்போது, அதை கண்ணை மூடிக்கொண்டு இந்த ஐகோர்ட்டு வேடிக்கை பார்க்காது.

எனவே, கீழ்க்கண்ட உத்தரவை போலீசாருக்கு பிறப்பிக்கிறேன். ஒரு புகாரின்மீது விசாரணை நடத்த ஒருவருக்கு சம்மன் அனுப்பும்போது, மீனாகுமாரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் போலீசார் பின்பற்ற வேண்டும்.

விவரங்கள்

அவ்வாறு சம்மன் அனுப்பும்போது, புகார் கொடுத்தவரின் பெயர், புகார் கொடுக்கப்பட்ட தேதி, எப்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த விசாரணை குறித்து போலீஸ் நிலையத்தில் உள்ள டைரியில் குறிப்பிட வேண்டும். விசாரணைக்கு ஆஜராகும் நபர்களை போலீஸ் அதிகாரிகள் துன்புறுத்தக்கூடாது. இந்த வழக்கை முடித்துவைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story