சென்னை ரெயிலில் ரூ.2 கோடி நகைகளை கொள்ளையடிக்க முயற்சி கேரளாவை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது


சென்னை ரெயிலில் ரூ.2 கோடி நகைகளை கொள்ளையடிக்க முயற்சி கேரளாவை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 4 May 2022 7:42 PM GMT (Updated: 4 May 2022 7:42 PM GMT)

சென்னை வந்த ரெயிலில் நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடிக்க முயன்ற கேரளாவை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜோலார்பேட்டை,

கோயம்புத்தூர் காந்தி பார்க் பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர் ரகுராம் (வயது 45). இவர் தன்னிடம் வேலை செய்யும் மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மாரிமுத்து (30) மற்றும் பரமசிவம் மகன் அய்யனார் (23) ஆகியோர் மூலமாக சென்னையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்க நகைகளை கொடுத்து அனுப்பி வைத்தார். அவர்கள் இருவரும் கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் நகைகளுடன் புறப்பட்டனர்.

கொள்ளையடிக்க முயற்சி

நேற்று அதிகாலை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ரெயில் வந்து கொண்டிருந்தபோது, ரெயிலில் இருந்த 2 வாலிபர்கள் திடீரென மாரிமுத்து மற்றும் அய்யனாரிடமிருந்து நகைகளை பறித்துள்ளனர். அவர்கள் நகைகளை கொடுக்க மறுத்து கெட்டியாக பிடித்து கொண்டதால் அவர்களுடைய முகத்தில் ‘பெப்பர் ஸ்பிரே’ அடித்துள்ளனர். இதனால் அவர்கள் சத்தம் போட்டுள்ளனர். இதை பார்த்ததும் அருகில் இருந்த பயணிகள் அந்த நபர்கள் இருவரையும் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பயணிகளின் கைகளில் மாட்டாமல் இருவரும் ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடியுள்ளனர். உடனடியாக இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

2 வாலிபர்கள் கைது

போலீசாரின் தேடுதல் வேட்டையில் ஜோலார்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே நின்ற 2 பேரும் சிக்கினர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கண்ணனூர் பகுதியை சேர்ந்த அலியாஸ் மகன் அஷ்ரப் (30), சுனில் மகன் சூரஜ் (26) என்பது தெரியவந்தது. ரகுராம் ஆபரணங்கள் செய்வதற்காக வழக்கமாக கொடுக்கும் பட்டறையின் மூலம் கிடைத்த தகவலின் பேரில் ரெயிலில் மாரிமுத்துவையும், அய்யனாரையும் பின்தொடர்ந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்ததாக இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story