வணிகர்களுக்கான குடும்ப நல இழப்பீடு தொகை ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்: முதல்-அமைச்சர் உறுதி


வணிகர்களுக்கான குடும்ப நல இழப்பீடு தொகை ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்: முதல்-அமைச்சர் உறுதி
x
தினத்தந்தி 6 May 2022 12:25 AM GMT (Updated: 6 May 2022 12:25 AM GMT)

வணிகர்களுக்கான குடும்ப நல இழப்பீடு தொகை ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும் என்று திருச்சியில் நடந்த மாநில வணிகர் விடியல் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருச்சி,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39-வது வணிகர் தினத்தை முன்னிட்டு 'தமிழக வணிகர் விடியல் மாநாடு' திருச்சியில் நேற்று நடந்தது.

மாநாட்டுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கி பேசினார்.

தொடர்ந்து அகில இந்திய வணிகர்கள் சம்மேளன (சி.ஏ.ஐ.டி.) தேசியத்தலைவர் பி.சி.பார்டியா, தேசிய பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் ஆகியோர் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினர்.

மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் பரிசு

அதைத்தொடர்ந்து மதியம் 12.35 மணிக்கு வணிகர் விடியல் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். அவருக்கு வணிகர் சங்க நிர்வாகிகள் வெள்ளி செங்கோலை நினைவு பரிசாக வழங்கினர்.

மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஏற்ப மஞ்சப்பைகளை வியாபாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-

வணிகர் நலன் காப்போம்

தி.மு.க. ஆட்சியானது வணிகர்களின் நலனை பேணக்கூடிய ஆட்சியாகத்தான் எப்போதும் இருந்திருக்கிறது. அப்படித்தான் இனியும் இருக்கும். வணிக வரித்துறை என்று ஒரு துறையே செயல்பட்டு கொண்டுள்ளது. வணிக வரித்துறையானது அரசுக்கு வருவாயை 4-ல் 3 பங்கை ஈட்டித்தரக்கூடிய முக்கிய துறையாக விளங்கி கொண்டிருக்கிறது.

வணிகர்களின் நலன் காக்கப்பட்டால்தான், அரசுக்கு வரக்கூடிய வருவாயின் நலனும் காக்கப்படும் என்பதை நான் உளப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

வணிகர் நலவாரியம்

தமிழ்நாடு வணிகர்நல வாரியத்தை 1989-ம் ஆண்டு உருவாக்கியவரே நமது கலைஞர்தான். தி.மு.க. ஆட்சியில்தான் அந்த வாரியமே உருவாக்கப்பட்டது.

வணிகர்நல வாரியத்தில் இதுவரை பதிவு செய்திருக்கக்கூடிய உறுப்பினர்கள் எண்ணிக்கை 84,101 ஆகும். கடந்த மார்ச் வரை இந்த வாரியத்தின் மூலம் ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 8,875 உறுப்பினர்கள் பெற்று பயன் அடைந்துள்ளனர்.

விரைவில் தமிழில் ஜி.எஸ்.டி.சேவை

ஜி.எஸ்.டி. இணையவழி சேவைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கிற காரணத்தால், தமிழிலும் அது பெறப்பட வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை வைத்தனர். தி.மு.க. அரசு அதை ஏற்று ஜி.எஸ்.டி. சேவைகள் தமிழிலும் வழங்கப்படலாம் என நாம் கடிதம் எழுதி இருக்கிறோம்.

விரைவில் ஜி.எஸ்.டி. சேவைகள் தமிழிலும் வழங்கப்படும் என நாம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த கோரிக்கையை தொடர்ந்து தி.மு.க. அரசு வலியுறுத்தும், வற்புறுத்தும்.

வணிகர்கள் உதவி

இந்த மாநாட்டுக்கு வருவதற்கு முன்பு டி.ஜி.பி.யுடன் ஆலோசனை செய்தேன். அதன் விளைவாக, சில வாரங்களுக்கு முன்பு நான் அறிமுகம் செய்து வைத்த ‘காவல் உதவி செயலியில்’ வணிகர்கள் உதவி என்ற புதிய பகுதியும் அதில் சேர்க்கப்படும் என்ற நல்ல செய்தியை தெரிவித்து கொள்கிறேன்.

வணிகர்களுக்கு யாராவது தொல்லை கொடுக்க நேரிட்டால், செயலியில் சேர்க்கப்பட்ட இந்த புதிய பகுதியில் காவல்துறையின் உதவியை நீங்கள் கோரலாம். உடனடியாக ரோந்து வாகன போலீசார் விரைந்து வந்து தகராறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பார்கள். வணிகர்களை பாதுகாக்கிற இந்த வசதி இன்னும் ஓரிரு வாரத்தில் துவங்க போகிறது.

குடும்ப நல இழப்பீடு ரூ.3 லட்சமாக உயர்வு

வணிகர் நல வாரியத்தை மேம்படுத்த உங்களில் இருந்து புதிய உறுப்பினர்களை நியமிக்க இருக்கிறேன். இதனால், வாரியத்திற்கு ஒரு புத்துயிர் ஊட்டப்பட்டு அனைத்து வித திட்டப்பணிகளும் முடுக்கி விடப்படும். வணிகர் நல வாரியம் மூலமாக தற்போது வழங்கப்பட்டு வரும் உறுப்பினர் இறப்புக்கான குடும்ப நல இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். தீ விபத்தில் பாதிக்கப்படும் வணிகர்களுக்கான உடனடி இழப்பீடு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளில் கடைகள் மற்றும் வணிக கடைகளில் நிலவி வரும் வாடகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான கொள்கை வழிமுறைகளை வகுக்க நகராட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் வழிகாட்டு குழு ஒன்று அமைக்கப்படும். தற்போது வணிக நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வணிக உரிமை எடுக்கப்பட வேண்டும் என்ற நிலையை மாற்றி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிப்பதற்கான திருத்தம் கொண்டு வரப்படும். உடற்பயிற்சி கூடங்களுக்கு இனிமேல் காவல்துறையின் உரிமம் தேவையில்லை.

திராவிட மாடல் ஆட்சி

பாலங்களோ அல்லது மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிற வேளையில் அதனால் பாதிக்கப்பட்டு கடைகள் இழக்கக்கூடிய வணிகர்களுக்கு அரசு அல்லது உள்ளாட்சி அமைப்பு மூலமாக வாடகை கடைகளை வழங்குவதில் நிச்சயமாக முன்னுரிமை அளிக்கப்படும்.

பெரிய நிறுவனங்கள் வளர்வதை மட்டுமே நாங்கள் பொருளாதார வளர்ச்சியாக நினைக்கவில்லை. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களும் வளரணும். அதுதான் பொருளாதார வளர்ச்சி. அப்படித்தான் நாங்கள் கருதுகிறோம். மிகப்பெரிய தொழில் அதிபர் வளர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது. உங்களை போன்ற சிறு வணிகர்களும் வளர வேண்டும் என நினைக்கிறோம். அதுதான் உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும். அதுதான் திராவிட மாடல் ஆட்சி.

வாழ்க வசைவாளர்கள்

மக்களின் எண்ணங்களை, எதிர்ப்பார்ப்புகளை நீங்கள் அரசுக்கு ஆலோசனைகளாக சொல்லலாம். அதை கேட்டு செயல்படுத்தி தர நாங்கள் காத்திருக்கிறோம். தயாராக இருக்கிறோம். அதே வேளையில் திட்டமிட்டு பரப்புகிற அவதூறுகளுக்கு பதில் சொல்லி எனது நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. அவர்களுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஒரே பதில் பேரறிஞர் அண்ணா சொன்ன வார்த்தையான, ‘வாழ்க வசைவாளர்கள்’ என்பதுதான்.

வணிகர்களின் கோரிக்கைகள் பல தந்திருக்கிறீர்கள். சட்டமன்ற கூட்டம் தொடர் முடிந்த பின்னர், உங்கள் கோரிக்கைகள் உறுதியாக நிறைவேற்றப்படும் என நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story