சிவகிரி அருகே ஸ்கூட்டரில் சென்ற தாய்-மகளை துரத்திய மர்ம விலங்கு - வனத்துறை அதிகாரிகள் ஆய்வு...!


சிவகிரி அருகே ஸ்கூட்டரில் சென்ற தாய்-மகளை துரத்திய மர்ம விலங்கு - வனத்துறை அதிகாரிகள் ஆய்வு...!
x
தினத்தந்தி 9 May 2022 6:15 AM GMT (Updated: 9 May 2022 6:15 AM GMT)

சிவகிரி அருகே ஸ்கூட்டரில் சென்ற தாய்-மகளை மர்ம விலங்கு துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகிரி,

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தாண்டாம்பாளையம் செங்காளி காட்டுபுதூர் பகுதியை சேர்ந்தவர் அனிதா. இவரின் மகள் யாழினி. இவர்கள் இருவரும் தாண்டாம் பாளையம் அருகே உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று இரவு 7.30 மணிக்கு ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

இவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியைக் கடந்தபோது 2 அடி உயரமுள்ள மர்ம விலங்கு  ஸ்கூட்டரை பின்தொடர்ந்து வந்துள்ளது.

இதனால் பயந்து போன இருவரும் ஸ்கூட்டரை வேகமாக இயக்கி உள்ளனர். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றவுடன் எதிரே ஒரு கார் வருவதை கண்டு மர்ம விலங்கு அருகில் இருந்த கரும்பு காட்டுக்குள் சென்று உள்ளது.

இந்த நிலையில் மர்ம விலங்கு நடமாடுவதால் இப்பகுதி மக்கள் மிகப்பெரிய அச்சத்தில் உறைந்துள்ளனர் இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு வனச்சரக அலுவலர் ரவீந்தரநாத் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் ஊஞ்சகாட்டு வலசு மற்றும் செங்காளிகாட்டுபுதூர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் பகுதியில் மர்ம விலங்கு சென்ற கால் தடங்களை ஆய்வு செய்தனர். 

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,

சிறுத்தை, புலி போன்ற வன விலங்குகள் இருக்க வாய்ப்பு குறைவு இருப்பினும் இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வனத்துறை அலுவலர்கள் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு தீவிரமாக கண்காணிப்பார்கள் என்று தெரிவித்தார்.

Next Story