ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி


ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
x
தினத்தந்தி 10 May 2022 7:11 AM GMT (Updated: 10 May 2022 7:11 AM GMT)

ஆம்பூர் அருகே மகள் வீட்டிற்க்கு சென்ற தாய் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

திரூப்பத்தூர்:

ஆந்திரா மாநிலம், குப்பம் மாவட்டம் மல்லானூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி ஈஸ்வரி (வயது 45).  இவர்களுடைய மகள் தீபாவை (26) ஆம்பூர் தாலுகா தேவலாபுரம் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் என்பவருக்கு கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் மருமகன் தேவராஜ்  கத்தார் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளதால் மகளைப் பார்க்க கடந்த வாரம் ஆம்பூருக்கு வந்துள்ளார் ஈஸ்வரி. இன்று காலை சுமார் 6 மணி அளவில் வெளியே சென்றபோது நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக மின்சார கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது. இதை பார்க்காத ஈஸ்வரி மின்சார கம்பியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே  துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தாய் வெகு நேரமாக திரும்பி வராத காரணத்தால் தீபா காலை 9 மணிக்கு அவரைத் தேடத் தொடங்கியுள்ளார். அப்போது அருகே உள்ள ஒரு கால்வாயில் ஈஸ்வரி சுருண்டு விழுந்து கிடந்ததை பார்த்த தீபா அம்மாவைப் பிடித்து இழுக்கும்போது அவருக்கும்  மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை  காப்பாற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஈஸ்வரி உடலை  ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story