தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 10 May 2022 8:22 AM GMT (Updated: 10 May 2022 8:22 AM GMT)

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய’அசானி’ தீவிர புயல் இன்று இரவு வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் வட ஆந்திரா-ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும், 

இதன் காரணமாக இன்று (10.05.2022) காஞ்சிபுரம், தி.மலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

11.05.2022 நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

12.05.2022 முதல் 14.05.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் சென்னையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story