தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 11 ஆயிரம் கோடி இழப்பு - சி.ஏ.ஜி. அறிக்கை


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 11 ஆயிரம் கோடி இழப்பு - சி.ஏ.ஜி. அறிக்கை
x

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ரூ.11,964.93 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2019-20 ஆம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை மத்திய அரசின் தலைமை கணக்குத் தணிக்கை(சி.ஏ.ஜி.) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 31 பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த இழப்பு 18 ஆயிரத்து 629 கோடியே 83 லட்சம் ரூபாய் என கூறப்பட்டுள்ளது. 

எரிசக்திதுறையில் உள்ள 3 பொதுத்துறை நிறுவனங்களில் மட்டும் 13 ஆயிரத்து 40 கோடியே 40 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2019-20 ஆம் நிதியாண்டில் 10 பொதுத்துறை நிறுவனங்களில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிகர இழப்பு 11 ஆயிரத்து 964 கோடியே 93 லட்சம் ரூபாய் என்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் ஆயிரத்து 74 கோடியே 48 லட்சம் ரூபாய் நிகர இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

8 போக்குவரத்து கழகங்களின் நிகர இழப்பு 5 ஆயிரத்து 230 கோடியே 58 லட்சம் ரூபாய் என்றும், கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் அதிகபட்சமாக 898 கோடியே 82 லட்சம் ரூபாய் நிகர இழப்பை சந்தித்துள்ளதாகவும் சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Next Story