செல்போன் டவரின் உச்சியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு...!


செல்போன் டவரின் உச்சியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு...!
x
தினத்தந்தி 11 May 2022 1:53 PM GMT (Updated: 11 May 2022 1:53 PM GMT)

வேலூர் அருகே 200 அடி உயர செல்போன் டவரின் உச்சியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

பேரணாம்பட்டு,

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் ரஷீதாபாத் பகுதியை சேர்ந்தவர் ரபீக் அஹம்மத்.  பிஸ்கெட் வியாபாரி.  இவரது மகன் ஷகீல் அஹம்மத் (26). சற்று மன நலம் பாதிக்கப்பட்டு போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. 

இவர் கடந்த சில ஆண்டுகளாகவே பேரணாம்பட்டு டவுன் நெடுஞ்சாலை பகுதியில் சுமார் 200 அடி உயரத்தில் அமைந்துள்ள செல்போன் டவரின் உச்சி பகுதிக்கு ஏறி சென்று குதித்து தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி மிரட்டி வந்து உள்ளார். 

இந்நிலையில்  இன்று காலை 6.30 மணியளவில் வழக்கம் போல் மீண்டும் அதே செல்போன் டவரின் உச்சி பகுதிக்கு செல்ல ஏறி கொண்டிருந்தார். அங்கிருந்த பொதுமக்கள் கீழே இறங்கும்படி கூறியும் இறங்கவில்லை நேரம் ஆக ஆக செல்போன் டவரின் உச்சி பகுதிக்கே சென்று நின்று குதிக்க முயன்றார். இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் போலீசார், பேரணாம்பட்டு தீயணைப்பு படையினர் ஆகியோர் விரைந்து சென்று அவரை கீழே இறங்கும்படி கூறினர். 

ஆனால் ஷகீல் அஹம்மதோ யாராவது மேலே வந்தால் கீழே குதித்து இறந்து விடுவதாக கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த பேரணாம்பட்டு நகராட்சி துணை தலைவர் ஆலியார் ஜூ பேர் அஹம்மத் உடனடியாக அங்கு வந்து மைக்கில் ஷகில் அஹம்மத்திடம் நைசாக பேச்சு கொடுத்து சமாதானப்படுத்தினார். இதனால் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர்  அவர் கீழே இறங்கி வந்தார்.



Next Story