குரூப் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி வரும் 21ஆம் தேதி நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசந்திரன்


குரூப் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி வரும் 21ஆம் தேதி நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசந்திரன்
x
தினத்தந்தி 17 May 2022 11:33 AM GMT (Updated: 17 May 2022 11:33 AM GMT)

ஜூன் மாதம் இறுதியில் குரூப் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

குரூப் 1 தேர்வு முடிவுகள் இந்த மாதம் இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றும்,  ஜூன் மாதம் இறுதியில் குரூப் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் , “குரூப் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி வரும் 21ஆம் தேதி நடைபெறும். தேர்வுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. 

காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வரவேண்டியது கட்டாயமாகும். இதன்படி 8.30 மணிக்கே தேர்வர்கள் வர வேண்டும். 8.59 மணிக்கு பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு கடந்த ஆண்டை விட 2 லட்சம் பேர் கூடுதலாக விண்ணப்பம் செய்துள்ளனர். தமிழ் வழியில் படித்த 79,942 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு மொத்தமாக 11,78,175 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலை நகரங்கள் மற்றும் குறிப்பிட்ட தாலுக்காக்களை உள்ளடக்கிய 117 தேர்வு மையங்களில் 4,012 தேர்வுக்கூடங்களில் தேர்வு நடைபெறும்” என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 


Next Story