23,737 மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு


23,737 மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு
x

வேலூர் மாவட்டத்தில் 3 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் 23,737 மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

மகளிர் உரிமைத்தொகை திட்டம்

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு, அவர்களின் விவரங்கள் பதிவு செய்ய 2 கட்டமாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டன.

வேலூர் மாவட்டத்தில் நடந்த முதற்கட்ட முகாமில் 2,07,738 பேரும், 2-வது கட்ட முகாமில் 97,889 பேரும் என்று 3,05,627 பேர் விண்ணப்பங்கள் பதிவு செய்தனர். விண்ணப்பங்கள் பெற்று அதனை பதிவு செய்யாதவர்களிடம் அதற்கான விளக்கம் கேட்கும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் அரசின் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினரும் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்காக கடந்த 18-ந் தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 660 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.

வேலூர் சலவன்பேட்டையில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நேற்று நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், செல்போன் செயலியில் விவரங்களை பதிவேற்றுவதில் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்று கேட்டறிந்தார். ஆய்வின்போது வேலூர் தாசில்தார் செந்தில், வழங்கல்துறை அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் 3 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் 23,737 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story