கரூரில் 3½ அடி உயரம் கொண்ட மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு திருமணம்


கரூரில் 3½ அடி உயரம் கொண்ட மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு திருமணம்
x

கரூரில் 3½ அடி உயரம் கொண்ட மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு, புதுக்குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 40). பி.காம் பட்டதாரியான இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது தாயாருடன் வசித்து வருகிறார். சுமார் 3½ அடி உயரம் கொண்ட இவரால் சராசரி மனிதர்களை போல் எந்த வேலையும் செய்ய முடியாது.

இந்தநிலையில் இதே உயரத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வணிக வரித்துறையில் பணியாற்றி வருவதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அவரை பார்க்க சென்ற சசிக்குமாருக்கு அவரை பிடித்துப்போக அவரிடம் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வ.உ.சி. தெருவை சேர்ந்த பி.ஏ. பட்டதாரியான சாந்திக்கும் (40), சசிக்குமாருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது.

பின்னர் உறவினர்கள், நண்பர்கள் படை சூழ மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு புதுக்குளத்துப்பாளையத்தில் உள்ள பகவதியம்மன் கோவிலில் நேற்று திருமணம் விமரிசையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வும் நடைபெற்றது. மணமக்களை உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்தி சென்றனர்.


Next Story