கரூரில், விஷவாயு தாக்கி 3 பேர் சாவு: நிவாரணம் வழங்கக்கோரி தர்ணா


கரூரில், விஷவாயு தாக்கி 3 பேர்  சாவு: நிவாரணம் வழங்கக்கோரி தர்ணா
x

கரூரில், விஷவாயு தாக்கி 3 பேர் இறந்தனர். இதையடுத்து அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக்கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கரூர்

கழிவுநீர் தொட்டி

கரூர் சுக்காலியூர் காந்தி நகரை சேர்ந்தவர் குணசேகரன், வக்கீல். இவர் அப்பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதில் தாந்தோணிமலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 23), தோரணக்கல்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (35) ஆகியோர் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த வீட்டின் அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு சிமெண்டு பூச்சுகள் முடித்து இருந்தனர். இதில் 2 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

விஷவாயு தாக்கியது

இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த தொட்டியின் உள்புறம் அடிக்கப்பட்டிருந்த பலகைகள் மற்றும் சவுக்கு கட்டைகளை அகற்றும் பணியில் மோகன்ராஜ், சிவக்குமார் ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 பேரும் அலறியபடி மயங்கி விழுந்தனர். இவர்களின் அலறல் சத்தம்கேட்டு பக்கத்து கட்டிடத்தில் பணி செய்து கொண்டிருந்த மணவாசியை சேர்ந்த சிவா என்கிற ராஜேஷ் என்பவர் அவர்கள் 2 பேரையும் மீட்க முயன்றுள்ளார். இதில் அவரும் விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்தார்.

3 பேர் பலி

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கும், தாந்தோணிமலை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் மயங்கி கிடந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தர்ணா

இந்்தநிலையில் இறந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண வழங்க வேண்டும் எனக்கூறி உடலை வாங்க மறுத்து அவர்களது உறவினர்கள் நேற்று காலை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி பிணவறை அருகே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உங்களது கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story