ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 March 2023 6:45 PM GMT (Updated: 13 March 2023 6:45 PM GMT)

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா மழவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வேலுசாமி மனைவி ராஜலட்சுமி (வயது 35) என்பவர் தனது மகள் பிரியதர்ஷினி (16), மகன் பிருதிவிராஜ் (16) ஆகியோருடன் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு வந்த அவர், திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து திறந்து தன் மீதும், தனது மகள், மகன் மீதும் ஊற்றிக்கொண்டு 3 பேரும் தீக்குளிக்க முயன்றனர். இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் தடுத்து நிறுத்தி அவர்களிடமிருந்த பெட்ரோல் கேனை பிடுங்கி அவர்கள் மீது முன்எச்சரிக்கையாக தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ராஜலட்சுமி கூறுகையில், தனது கணவருக்கும், அவரது தம்பி செந்திலுக்கும் பொதுவாக உள்ள 10 ஏக்கர் நிலத்தை பாகப்பிரிவினை செய்யக்கோரி செந்திலிடம் பலமுறை முறையிட்டும் மறுத்து வருகிறார். அதோடு எங்களுக்கு சொந்தமான நிலத்தில் பயிர் சாகுபடி செய்யவும் மறுத்து இடையூறு செய்து வருகிறார். இதுகுறித்து பலமுறை கண்டாச்சிபுரம் போலீசில் புகார் செய்தும் மற்றும் அங்குள்ள தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று முறையிட்டார். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்று அவர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story