கொலை, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது


கொலை, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 4 பேர்   குண்டர் சட்டத்தில் கைது
x

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கொலை வழக்கு

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமுடிமண் பகுதியை சேர்ந்த லட்சுமணபெருமாள் மகன் செல்வக்குமார் (வயது 25) என்பவர், தம்பியை கொலை செய்த வழக்கில் ஓட்டப்பிடாரம் போலீசார் கைது செய்தனர். கயத்தாறு வாகைத்தாவூர் பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்ற தர்மர் மகன் சந்தனகுமார் என்ற குமார் (33) என்பவரை கயத்தாறு போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர். ஆத்தூர் தலைவன்வடலியை சேர்ந்த மாரிச்செல்வம் மகன் மதன் (23) என்பவரை தாளமுத்துநகர் போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.

இதே போன்று நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த தங்கசாமி மகன் தங்கராஜ் (25) என்பவரை மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியாக கழுகுமலை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 4 பேரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

குண்டர் சட்டம்

இந்த நிலையில் 4 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், செல்வக்குமார், சந்தானகுமார் என்ற குமார், மதன், தங்கராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அநத உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.

நடப்பு ஆண்டில இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 28 பேர் உட்பட 119 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story