போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 பேருக்கு தொடர்பு: மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு பரபரப்பு தகவல்


போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 பேருக்கு தொடர்பு: மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு பரபரப்பு தகவல்
x

பரபரப்பை ஏற்படுத்திய போலி பாஸ்போர்ட் வழக்கில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்பட 41 பேருக்கு தொடர்பு இருப்பதாக மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரை,

மதுரை வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த வக்கீல் முருக கணேசன் கடந்த 2019-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.

போலி பாஸ்போர்ட் விவகாரம்

அதில் ஏராளமானவர்களுக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும், போலி பாஸ்போர்ட்டுகளை ரத்து செய்யும்படியும் கூறியிருந்தார்.

இது சம்பந்தமாக சில மாதங்களுக்கு முன்புபா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு, இந்த பாஸ்போர்ட் மோசடியில் அப்போதைய மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்.

ஆனால் இதுதொடர்பான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு இந்த விவகாரத்திற்கும், டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இந்த பாஸ்போர்ட் மோசடி வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்து விசாரணையை3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் கெடு விதித்து ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

இந்தநிலையில் வக்கீல் முருக கணேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கூறியிருந்ததாவது:-

தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்காக மதுரை மண்டல அலுவலகம் செயல்படுகிறது. இதன்கீழ் மதுரை, நெல்லை ஆகிய நகரங்களில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா நடத்தப்படுகிறது. இது தவிர, 8 இடங்களில் தபால் அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் சேவை நடத்தப்படுகிறது.

50 கி.மீ. தூரத்தை தாண்டி பாஸ்போர்ட்டுக்காக மக்கள் அலையக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. போலீஸ் விசாரித்து அறிக்கை அளிப்பதன் பேரில் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த 2019-ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதத்திற்குள் மதுரை மாவட்டத்தில் ஏராளமான பாஸ்போர்ட் முறைகேடாக வழங்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக, மதுரை அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எல்லைக்குள் 53 போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தாமதம்

அதாவது, போலி ஆவணங்களை தாக்கல் செய்து பல இலங்கை அகதிகள் பாஸ்போர்ட் பெற்று இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கியூ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அகதிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கியதில் தபால்துறை அதிகாரிகளும், பாஸ்போர்ட் அதிகாரிகளும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

ஆனால் இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை மட்டும்தான் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. விசாரணை செய்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கியூ பிரிவு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் போலி பாஸ்போர்ட்டுகள் வைத்துள்ள இலங்கை அகதிகள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது.

அந்த பாஸ்போர்ட்டுகளை ரத்து செய்யவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வசதியாக கீழ்கோர்ட்டில் நிலுவையில் உள்ள பாஸ்போர்ட் மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, போலி பாஸ்போர்ட் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி 3 மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

பின்னர் இதுதொடர்பாக விசாரணை தாமதமாவதால் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் சம்பந்தப்பட்ட மதுரை மாவட்ட கோர்ட்டில் இதுவரை இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் போலீசார் தாமதம் செய்து வருகின்றனர். ஏனென்றால் இந்த மோசடியில் பல்வேறு முக்கிய போலீஸ் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகவே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய தாமதித்து வருகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

41 பேர் குற்றவாளிகள்

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கியது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில் 41 பேர் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டு உள்ளனர். இதில் 14 பேர் மத்திய அரசு ஊழியர்கள், 5 பேர் தமிழக அரசு ஊழியர்கள்.

தற்காலிக பாஸ்போர்ட் ஊழியர் உள்பட வேறு பலருக்கும் தொடர்பு உளளது. மத்திய அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய அனுமதிக்குமாறு மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளிடம் மனு அனுப்பி உள்ளோம். இதில் ஒரே ஒரு அதிகாரி மீது மட்டும் விசாரணை நடத்த அனுமதி கிடைத்துள்ளது. மற்றவர்கள் மீது விசாரணை நடத்த அனுமதி கேட்ட மனு நிலுவையில் உள்ளது.

கீழ்கோர்ட்டில் விசாரணை

இந்தநிலையில் முதல்கட்டமாக கீழ்கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதன் மீதான விசாரணை கோர்ட்டில் தொடங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பாஸ்போர்ட் வழக்கு சம்பந்தமான தங்களின் பதில் குறித்த தகவல்களை நிலை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள். அதை பரிசீலித்துவிட்டு, இந்த அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்படும் என்று அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

பாஸ்போர்ட் மோசடியில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்பட 41 பேருக்கு தொடர்பு இருப்பது அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்டு இருப்பதால், அவர்கள் விரைவில் விசாரணை வளையத்துக்குள் சிக்குகிறார்கள். எனவே இந்த வழக்கு மீண்டும் விசுவரூபம் எடுக்கிறது.


Next Story