3-வது நாளாக ரூ.50 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


3-வது நாளாக ரூ.50 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x

3-வது நாளாக ரூ.50 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

செம்பட்டு:

தங்கம் கடத்தல்

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானத்தில் வரும் சில பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது தொடர்கதையாகி உள்ளது. குறிப்பாக துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கடந்த சில மாதங்களாக திருச்சி விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வருவது குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. தங்கம் கடத்தப்படுவதை கட்டுப்படுத்தும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாரிகள் சோதனை

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிகள் கடத்தி வந்த ஒரு கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல் நேற்று முன்தினம் காலை துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

2 நாட்களில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு துபாயில் இருந்து இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

அப்போது திருச்சியை சேர்ந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை சோதனை செய்தபோது தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 3 நாட்களில் திருச்சி விமான நிலையத்தில் மூன்று கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story