ரெயிலில் கடத்தப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல்


ரெயிலில் கடத்தப்பட்ட  6 கிலோ கஞ்சா பறிமுதல்
x

மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயிலில் கடத்தப்பட்ட 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தி வந்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயிலில் கடத்தப்பட்ட 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தி வந்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீவிர கண்காணிப்பு

குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மேலும் மாவட்டம் முழுவதும் இதற்கென தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் மாவட்டத்திற்குள் கஞ்சா வியாபாரிகள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு அவர்களின் வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன.

6 கிலோ கஞ்சா பறிமுதல்

இந்த நிலையில் மும்பையில் இருந்து நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக நேற்று அதிகாலை நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குமார்ராஜ், ஜோசப் ஆகியோர் தயாராக இருந்தனர். கோட்டார் ரெயில் நிலையத்துக்கு மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததும், அதில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் உள்ள இருக்கையின் கீழ் கேட்பாரற்று பை ஒன்று இருந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் அதனை திறந்து பார்த்த போது, அதில் 3 பொட்டலங்களாக மொத்தம் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகிறார்கள்.


Next Story