சுதந்திர தின விழா பாதுகாப்பு பணியில் 750 போலீசார்


சுதந்திர தின விழா பாதுகாப்பு பணியில் 750 போலீசார்
x

75-வது சுதந்திர தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாநில, மாவட்ட எல்லைப்பகுதியில் தீவிர வாகன சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

75-வது சுதந்திர தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாநில, மாவட்ட எல்லைப்பகுதியில் தீவிர வாகன சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

75-வது சுதந்திர தின விழா

இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா உத்தரவின்பேரில் வேலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையங்கள், மார்க்கெட், வணிகவளாகங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். மேலும் வெளி மாவட்டங்கள், பிறமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை மாநில மற்றும் மாவட்ட எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பிள்ளையார்குப்பம், கண்ணமங்கலம் கூட்ரோடு அருகே, மாதனூர் அருகே ஆகிய பகுதிகளில் நிறுத்தி சோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர், ஸ்ரீபுரம் தங்ககோவில், விரிஞ்சிபுரம் மார்கப்பந்தீஸ்வரர் ஆகிய கோவில்களுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் மற்றும் பொருட்களை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யவும், இந்த கோவில்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் உள்ளனர். காட்பாடி ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கொண்டும், மோப்ப நாய் மூலமும் சோதனை செய்யப்பட்டு, அதன்பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த பணியை ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் மேற்கொள்வார்கள்.

மாநில, மாவட்ட எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் உஷார்நிலையில் இருக்கவும், மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடவும் அனைத்து போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) இரவு தொடங்கி 16-ந் தேதி காலை வரை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story